மத்திய கிழக்கு நாடுகளிலும்
அங்கிருந்து உலகின் சில நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வரும் மேர்ஸ்
(MERS) தொற்று நோயைத் தடுக்கும் தேவை மிக அவசரமானது ஆனால் உலகளாவிய சுகாதார
அவசரம் அல்ல என உலக சுகாதார அமைப்பான (WHO) தெரிவித்துள்ளது.
இத்தொற்று நோய் ஒரு நபரிடம் இருந்து
இன்னொருவருக்கு இலகுவில் தொற்றிக் கொள்வதற்கான அதிகரித்து வரும் சான்றுகள்
எதையும் தாம் அறியவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ள போதும் MERS
எக்காரணிகளால் மனிதர்களுக்கிடையே பரவுகின்றது என்பதையும் ஆய்வாளர்கள்
கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் MERS வைரஸ் இனால் தாக்கப் பட்டவர்கள் 571 பேர் எனவும்
இதில் 171 பேர் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ள WHO அமைப்பு இந்நோய்
பரவி இருக்கும் 18 நாடுகள் அடையாளம் காணப் பட்டுள்ளதாகவும் இதில் இறுதியாக
சேர்ந்த நாடு நெதர்லாந்து எனவும் கூறியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்
பட்டவர்கள் வாழும் நாடாக சவுதி அரேபியாவும், ஐக்கியா அரபு இராச்சியமும்
இனம் காணப் பட்டுள்ளன. மேலும் MERS தொற்று நோய் தாக்கியவர்களில் 30%
வீதமானோர் மரணித்துள்ளதாகவும் புள்ளி விபரம் கூறுகின்றது. மனிதனின் சுவாசத்
தொகுதியைத் தாக்கி கபவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக் கூடிய
மேர்ஸ் தொற்றுநோய்க்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது விசேட சிகிச்சையோ இல்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளில் விமானத்தில் இருந்து வந்து
சுவாசக் கோளாறு மற்றும் நோய் அறிகுறிகளுடன் தென்பட்டால் மத்திய கிழக்கில்
இருந்து வந்தவர்களா எனப் பரிசோதிக்கப் பட்ட பின்னரே மெல்ல வெளியே நடமாட
அனுமதிக்கும் பணி மெல்ல மெல்ல அமுலுக்கு வந்துள்ளது. முதன் முதல் சீனாவில்
2002 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட மேர்ஸ் வைரஸ் குறுகிய காலத்தில் 800
பேரின் உயிரைக் குடித்து இருந்தது.
No comments:
Post a Comment