அமெரிக்கக் கண்டத்தைக் கண்டு பிடித்த
கப்பலோட்டி கிறிஸ்தோபர் கொலம்பஸ் பயணித்த சாந்தா மரியா என்ற வரலாற்றுச்
சிறப்பு மிக்க பாய்மரக் கப்பலின் சிதைவுகள் கண்டு பிடிக்கப் பட்டிருக்கலாம்
என உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு ஹைட்டியின் கடற்பகுதியில்
கப்பல் பாகம் ஒன்று கொலம்பஸ் பயணித்த தலைமைக் கப்பல் சாந்தா மரியா ஆக
இருக்கலாம் என ஒரு ஆய்வாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள போதும் இக்
கப்பல் பாகம் மேலும் பரிசோதிக்கப் பட்ட பின்னரே சாந்த மரியாவா என நிரூபிக்க
முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
15 ஆம் நூற்றாண்டில் அதாவது கி.பி 1492 கிறிஸ்துமஸ் தினத்தில்
மூழ்கடிக்கப் பட்டதாக வரலாற்றில் கூறப்பட்டிருக்கும் சாந்தா மரியா கப்பலில்
ஸ்பெயின் அல்லது போர்த்துக்கல்லில் இருந்து கொண்டு வரப்பட்ட
நிலைப்படுத்தும் கற்கல் மற்றும் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்
படும் பீரங்கியின் சேதம் ஆகியவை குறித்த கடற் பகுதியில் கிடைக்கப்
பெற்றுள்ளன.
தற்போது இதனைக் கண்டுபிடித்த க்லிஃபோர்ட் என்பவர் ஹிஸ்டரி சேனலின்
(History) ஆதரவுடன் குறித்த சேதங்கள் கிடைத்த பகுதியைப் பாதுகாக்க ஹைட்டி
அரசினை வலியுறுத்தியுள்ளார். இதேவேளை சுமார் 500 வருடங்களாக மரத்தால்
செய்யப் பட்ட இக்கப்பலின் பாகங்கள் சேதமடையாது இருப்பது மிக அரிது என்ற
கருத்தும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment