அமெரிக்காவை வேறெந்த நட்பு
நாட்டையும் விட இஸ்ரேல் மிக அதிகமாக புலனாய்வு செய்திருப்பதாகவும்
இந்நடவடிக்கைகள் எல்லை மீறி அபாய கட்டத்தை எட்டி விட்டதாகவும்
செவ்வாய்க்கிழமை நியூஸ்வீக் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் மொஸ்ஸாட் உளவுத் துறையின்
அமெரிக்கா மீதான இலக்குகளாக அதன் தொழிற்துறை மற்றும் தொழிநுட்ப ரகசியங்கள்
ஆகியவை உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதைவிட இஸ்ரேலியர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா எடுப்பதற்கான
செயற்பாட்டை சட்ட ரீதியில் இலகுவாக்குவதும் மொஸ்ஸாட்டின் (Mossad) நோக்கம்
என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மண்ணில் எமது
உளவாளிகளின் புலனாய்வு நடவடிக்கையை தீவிரப் படுத்தியுள்ளோம் என்ற
குற்றச்சாட்டுக்கள் யாவும் ஆதார பூர்வமற்றவை என புதன்கிழமை இஸ்ரேல்
வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லியெபெர்மான் இராணுவ ரேடியோ அலையில்
இக்குற்றச்சாட்டின் அனைத்து பிரிவுகளையும் மறுத்துரைத்துள்ளார்.
நியூஸ்வீக் தனது செய்திக்கு ஆதாரமாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு,
மாநிலத் திணைக்களம் மற்றும் FBI ஆகியவை வெளியிட்டுள்ள அறிக்கையை சுட்டிக்
காட்டியுள்ளது. 1985 இல் இஸ்ரேலுக்காக அமெரிக்க மண்ணில் உளவு பார்த்த
ஜொனாதன் பொல்லார்ட் எனும் அமெரிக்க கப்பற் படை நிபுணரை அமெரிக்கா
வாஷிங்டனில் கைது செய்து ஆயுள் தண்டனை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment