Search

Wednesday, October 27, 2010

ஆரூடம் புகழ் அக்டோபஸ் 'பால்' மரணம் - ஸ்பெயின் ஆழ்ந்த கவலை!


உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை துல்லியமாக கணித்த ஆக்டோபஸுக்கு தனது வாழ்நாளை கணிக்க முடியாமல் போய்விட்டது போலும்.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பீபா காற்பந்து போட்டிகளின் காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதிப்போட்டி உட்பட 8 போட்டி முடிவுகளை துல்லியமாக கணித்து கூறியதால் உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்த ஆக்டோபஸ் பால், இயற்கை மரணமடைந்துவிட்ட அதிர்ச்சி தகவல், காற்பந்து ரசிகர்களிடையே பெருங்கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் ஓபர் அவுசனில் கடல்வாழ் உயிரினங்கள் அருங்காட்சியத்தில் வசித்த மூன்றே வயதான அக்டோபஸ் பாலின் பூர்வீகம் இங்கிலாந்து.

ஃபீபா காற்பந்து போட்டிகளில் ஒன்றில் இங்கிலாந்து 4-1 என ஜேர்மனியிடம் தோற்ற போது, இதனை முன்னரே கணித்துக்கூறிய பாலை, சொந்த நாட்டையே அவமானப்படுத்தியுள்ளது என இங்கிலாந்து ஊடகங்கள் பொறிந்து தள்ளின.

ஸ்பெயின் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தும் என பால் அடித்துக்கூறியது நெதர்லாந்து ரசிகர்களிடையேயும் கோபத்தை கிளறியிருந்தது. 'we want paul for the pan' என கொலை மின்னஞ்சல் கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

இதனால் ஜேர்மனிய அருங்காட்சியத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஸ்பெயின் சொன்னபடியே வெற்றி பெற்றதும், உடனடியாக அக்டோபஸை அந்த நாட்டுக்கு கொண்டு வர ஸ்பெயின் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் விருந்தாளி போல் வந்து மீண்டும் ஜேர்மனிக்கே சென்றுவிட்டது அக்டோபஸ். பாலின் மறைவையொட்டி, அதன் உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஸ்பெயின் ரசிகர்களின் பினோமினல் ஹீரோவாக, இந்த அக்டோபஸ் மாறிவிட்டதால், அவர்களால் சோகத்தை தாங்க முடியவில்லையாம்.

இதேவேளை பாலை தமது அருங்காட்சியத்திலேயே புதைத்து சிறிய சமாதி கட்டப்போவதாக, ஜேர்மனி தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அது பற்றிய தொகுப்பையும் வெளியிட இருப்பதாக அருங்காட்சியத்தின் ஸ்டீபன் பார்வோல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment